சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்த ஆயுள் தண்டனை கைதி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிச் சென்றார்.
சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அரைமூக்கன் செல்வம் (45). இவர் மீது சேலம் அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை, செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் ஆள்கடத்தல் மற்றும் கொலை மிரட்டல், கொலை, கட்டப் பஞ்சாயத்து என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இதனிடையே, செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த மோகன் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் கைதான அரைமூக்கன் செல்வத்துக்கு, சேலம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இதையடுத்து அரைமூக்கன் செல்வம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மனைவிக்கு உடல்நலக்குறைவு எனக் கூறி கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை அரைமூக்கன் செல்வம் பரோலில் சென்றார்.
கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி அரைமூக்கன் செல்வம் சிறைக்கு வரவேண்டும். ஆனால், அவர் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே அரைமூக்கன் செல்வத்தை சிறை அதிகாரிகள் தேடி வந்த நிலையில் வியாழக்கிழமை சேலம் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.
இந்த நிலையில், சாப்பிட்டு வருவதாகக் கூறி சென்ற அரைமூக்கன் செல்வம் திடீரென தப்பிச் சென்றார். நீதிமன்ற ஊழியர்கள் அக்கம்பக்கத்தில் தேடியும் அவரைக் காணவில்லை. பின்னர் அவர் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக நீதிமன்ற ஊழியர்கள் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதன்பேரில் அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து அரைமூக்கன் செல்வத்தை தேடி வருகின்றனர்.