சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் குழுவினர் பாராட்டுத் தெரிவித்தனர்.
தேசிய அளவிலான தரப்பட்டியலில் இடம்பிடிக்கும் வகையில், சேலம் அரசுப் பொறியியல் கல்லூரி குறித்த விவரங்களுடன் அண்மையில் தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில், தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் குழு இரு நாள்கள் இக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
காக்கிநாடா ஜவாஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எஸ்.எஸ். குமார் தலைமையில் ஆய்வுக் குழுவினர் 2-வது நாளாக சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வை நிறைவு செய்த குழுவினர் ஆய்வறிக்கையை, கல்லூரி முதல்வர் ஜி.விமலா ரோஸ்லினிடம் வழங்கினர். அப்போது, தேசிய தர மதிப்பீட்டு மற்றும் தர நிர்ணயக்குழுவின் தலைவர் பேராசிரியர் வி.எஸ்.எஸ். குமார் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியில், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஏழை மாணவர்கள் தரமான தொழில்கல்வி பயிலும் வகையில், இக்கல்லூரியின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாகவும் கூறினார். ஆய்வறிக்கை தேசிய தரமதிப்பீடு மற்றும் நிர்ணயக்குழுவின் தலைமையகத்தில் அளிக்கப்பட்டு அதன் முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று கல்லூரி முதல்வர் ஜி.விமலா ரோஸ்லின் தெரிவித்தார்.
ஆய்வின் போது, துணை முதல்வர் ஆர்.விஜயன்,தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக்குழு ஒருங்கிணைப்பாளர் வி.ராஜ்குமார், பேராசிரியர்கள் டி. ஷோபா ராஜ்குமார், சி.வசந்தநாயகி,வி.கீதா, பி.சுந்தரராஜ்,ஆர்.விமலா,ஏ.எம்.கல்பனா,எஸ்.லீமா மேரி, கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் அறிவழகன் ஆகியோர் உடனிருந்தனர்.