குடியரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்பு மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை இணைந்து சங்ககிரி சந்தைப்பேட்டையிலிருந்து குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை வரை சாலையின் இரு புறங்களிலும் 70 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
குடியரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை (அக்.15) கொண்டாடப்படுவதையொட்டி அவரது நினைவாக சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்பு மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை இணைந்து சங்ககிரி பால்வாய் அருகே உள்ள அரசு மாணவர் விடுதி வளாகம் முன்பிருந்து குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை வரை சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடும் விழாவை மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.குமாரசாமி தலைமை வகித்து தொடக்கி வைத்து, மரம் நடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கிக் கூறினார்.
சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வி. செல்வராஜூ முன்னிலை வகித்தார். சங்கத்தின் செயலர் கே.கே.நடேசன் வரவேற்றார்.
பொருளாளர் என்.மோகன்குமார், உபத்தலைவர் ஆர்.ஆர்.மோகன்குமார், இணைச் செயலர் எம்.சின்னத்தம்பி, பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம் பழனிசாமி, நிர்வாகிகள் கோமதி பழனிசாமி, எஸ்டிஎஸ்.கனகராஜ், துரைசாமி, கவின், கேஎம்எஸ். கனகராஜ், சீனிவாசன், காந்தி, தேசிங், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் வேம்பு, புங்கன், புளி, மகிழம், நீர்மருது, நாவல், மரமல்லி, மந்தாரை, ஈட்டி, பாதாம் உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்த 70 மரக்கன்றுகள் நடப்பட்டன.