மேட்டூர் அருகே நள்ளிரவில் வழிப்பறி கும்பலைச் சேர்ந்த மூவரை போலீஸார் பிடித்தனர்.
மேட்டூர் அருகே உள்ள கோனூர் சமத்துவபுரம் பகுதியில் கருமலைக்கூடல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில் போலீஸார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சாலையோரம் காரின் அருகே நின்றுகொண்டிருந்த 5 பேர், போலீஸாரைப் பார்த்தும் காரில் ஏரி தப்ப முயன்றனர். போலீஸார் தடுக்க முயன்றபோது அவர்கள் மீது காரை ஏற்ற அக்கும்பல் முயற்சித்தது. இதையடுத்து போலீஸார் கற்களை கார் கண்ணாடியின் மீது வீசியதால் அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீஸார் அக்கும்பலை விரட்டிச் சென்று அதில் மூவரை பிடித்தனர். இருவர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவர்களிடமிருந்து கையுறை, குல்லா, கத்தி மற்றும் காரை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிடிபட்டவர்கள் நெடுஞ்சாலையில் கத்தியைக்காட்டி வழிப்பறி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், தப்பி ஓடிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். பிடிபட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.