சேலம் ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காவல்துறை, ராணுவம் மற்றும் அனைத்து பாதுகாப்புத் துறைகளிலும் பணியின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி வீர வணக்க நாள் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
நடப்பாண்டில் அனைத்து பாதுகாப்புத் துறைகளிலும் பணியின்போது வீர மரணம் அடைந்த 414 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சேலம் மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 126 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகரக் காவல் ஆணையர் கே.சங்கர், சேலம் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) கார்த்திகேயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோ.ஜார்ஜ், துணை ஆணையர் தங்கதுரை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர். மேலும், பணியின் போது உயிர் தியாகம் செய்தோரின் குடும்பத்தினர் நேரில் அழைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டனர்.