ஆத்தூர் வசிஷ்ட நதிக் கரையில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மருத மரத்தை வெட்டிக் கடத்த முயன்றபோது, ஆத்தூர் வட்டாட்சியர் செல்வன் ஜேசிபி மற்றும் மரங்களை திங்கள்கிழமை பறிமுதல் செய்தார்.
ஆத்தூர் வடக்கு உடையார்பாளையம் நேரு நகர் பகுதியில் வசிஷ்ட நதிக்கரையில் இருந்த 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த மருத மரத்தை சில சமூக விரோதிகள் வெட்டுவதாக ஆத்தூர் வட்டாட்சியர் செல்வத்துக்கு தகவல் கிடைத்தது.அங்கு விரைந்து சென்று பார்த்த போது, அந்த பழமையான மரத்தை ஞாயிற்றுக்கிழமை முதல் வெட்டி வருவது தெரிய வந்தது. வட்டாட்சியரைப் பார்த்ததும் அங்கு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தவர்கள் தப்பியோடினர். இதையடுத்து, அங்கிருந்த ஜேசிபி இயந்திரத்தைப் பறிமுதல் செய்து விசாரித்தனர். அப்போது அந்த மரம் தென்னங்குடிபாளையம் மாரியம்மன் கோயிலுக்காக வெட்டப்படுவதாகவும்,அதற்காக அலுவலர்களிடம் ஒப்புதல் பெற்று இருப்பதாகவும் தெரிவித்தனர். ஒப்புகை கடிதத்தைக் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார்கள்.
இதையடுத்து அங்கிருந்த மரம் மற்றும் ஜேசிபி இயந்திரத்தைப் பறிமுதல் செய்து கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர். அப்போது வட்டாட்சியர் செல்வத்திடம் அங்கு வந்த விடுதலைச் சிறுத்தைக் கட்சி செய்தித் தொடர்பாளர் நாராயணன், நரசிங்கபுரம் நகர செயலாளர் சாமுண்டிக்குமார் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.