பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளுக்கு செயல்வடிவம் கொடுத்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி என்று திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என்.சிவா பேசினார்.
சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் தெய்வீகம் திருமண மண்டபத்தில் கருணாநிதி புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என்.சிவா பேசியது:
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்கையில் இருந்து பின்வாங்காதவர். பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளை செயல்படுத்திக் காட்டியவர். அவர்களின் கொள்கைகளுக்கு செயல்வடிவம் கொடுத்தவர்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கோயில் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். அதேபோல, பெண்களுக்கு சொத்துரிமை, விதவை திருமண சட்டத்தை ஆதரித்துக் கொண்டு வந்தவர். இதுபோல பல்வேறு சமுக நீதி திட்டங்களைப் பதவியில் இருக்கும்போது நிறைவேற்றி சாதனை படைத்தவர் ஆவார் என்றார்.
நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலரும், வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன், எழுத்தாளர் சு.வெங்கடேசன், கவிஞர் நெல்லை ஜெயந்தா உள்ளிட்டோர் பேசினர்.