சேலம் காசி விஸ்வநாதர் கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் சுவாமி சிலையை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மணல் மார்கெட் பகுதியில் பழைமையான காசி விஸ்வநாதர் கோயிலில் நடராஜர் சன்னிதி அருகே காகிதத்தால் சுற்றப்பட்ட பொருள் புதன்கிழமை நள்ளிரவில் கிடந்தது.
இதைப் பார்த்த காவலாளி காகிதத்தை அகற்றி பார்த்தபோது, அர்த்தநாரீஸ்வரர் சிலை இருந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழரசு வியாழக்கிழமை காலை
விசாரணை மேற்கொண்டார். இதில், அர்த்தநாரீஸ்வரர் சிலை 2 கிலோ 178 கிராம் இருந்தது என தெரிகிறது.
இதுதொடர்பாக மாநகர போலீஸாரும், சிபிசிஐடி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக நகரக் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயிலில் வைக்கப்பட்டுள்ள 5 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணையைத் துவங்கியுள்ளனர். அதேவேளையில் இந்தச் சிலை எந்தக் காலத்தைச் சேர்ந்தது, ஐம்பொன் சிலையா என்பது குறித்து அறிவதற்காக தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழரசு தெரிவித்தார்.
இதனிடையே தமிழத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிலை கடத்தலில் தொடர்புடைய நபர்கள் யாராவது சிலையை வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.