குடிநீர் கேட்டு, அரசு பேருந்து உள்பட வாகனங்களை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோனூர் ஊராட்சியில் உள்ள ஆண்டிக்கரை கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை இருந்துவருவதாகவும், இதுதொடர்பாக அரசு அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கிராம மக்கள் புகார் கூறினர்.
இதையடுத்து, அவர்கள் வெள்ளிக்கிழமை காலை கிராமத்துக்கு வந்த அரசு பேருந்தை சிறைபிடித்தனர். சாலையில் கற்களை வைத்து மறியலிலும் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த தனியார் கல்வி நிறுவனங்களின் வாகனங்களையும் சிறைபிடித்தனர். சுமார் 2 மணி நேரம் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.
தகவலின்பேரில் அங்கு வந்த கருமலைக்கூடல் போலீஸாரும், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசுத் துறையினர் உறுதி அளித்த பின்னர், போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
ஆத்தூரில் ஆர்ப்பாட்டம்...
சீரான குடிநீர் விநியோகம் கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முல்லைவாடி பகுதி, 3, 4, 5, 7-ஆவது வார்டுகளில் வாரம் இருமுறை குடிநீர் வழங்க வேண்டும், குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதைத் தடுக்க வேண்டும், மேட்டூர் குடிநீரே கொடுக்காமல்,குடிநீர் கட்டணம் ரூ.250- லிருந்து ரூ.450 ஆக உயர்த்தி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும், எரியாத மின்விளக்கை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கட்சியின் மாவட்டச் செயலர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், வட்டாரச் செயலர் ஏ.முருகேசன், நிர்வாகிகள் இல.கலைமணி, செங்கமலை, மருதமுத்து, எஸ்.பிரபு, ஆர்.வரதராஜீ, பி.கதிரேசன், பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.