கெங்கவல்லி அருகே வீரகனூரை அடுத்த பகடப்பாடியில் குடிநீர் கேட்டு சாலை மறியல் பொதுமக்கள் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
பகடப்பாடி கிராமத்தில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக மேட்டூர் குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை. இதனால், உள்ளூர் ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் விநியோகம் அவ்வப்போது செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த ஆழ்துளைக்கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் விநியோகம் முழுமையாக நின்றுவிட்டது.
பாதிப்படைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் மேல் நடவடிக்கை இல்லை என்பதால் வீரகனூர் - பைத்தூர் சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வீரகனூர் போலீஸார், தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் நிகழ்விடம் வந்து மக்களிடம் பேச்சு நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து,பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.