ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தனியரசு தெரிவித்தார்.
தாரமங்கலத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு கலந்துகொண்டு கட்சிப் வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் அரசு அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் சோதனை என்ற பெயரில் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது.
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழகஅரசு அமைச்சரவையைக் கூட்டி ஆளுநருக்கு தீர்மானத்தை அனுப்பி வைத்ததது பாராட்டத்தக்கது. இந்த விவகாரத்தில் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்பு தி.மு.க.வில் உள்ள வன்முறையாளர்களை உடனடியாக நீக்குவது வரவேற்கத்தக்கது.
தாரமங்கலம் பகுதியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் கொடிகள், பதாகைகளைச் சேதப்படுத்திய தி.மு.க.வினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை வரலாறு காணாத அளவுக்கு மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அத்தியாவசியப் பொருள்களின் விலைஅதிகரித்துள்ளது. வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் மோசமான ஆட்சி நடத்திவரும் பா.ஜ.க. அரசு விலை உயர்வைக் குறைக்கவில்லையென்றால், வரும் மக்களவைத் தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றிப் பெற முடியாது. சிறைகளில் சொகுசு வசதிகள் செய்து கொடுத்திருந்தால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார்.