தொழில் உறவை பேணி பாதுகாக்கும் வேலை அளிப்பவர்கள், தொழிற்சங்கங்களுக்கு 2017- ஆம் ஆண்டுக்கான தொழில் நல்லுறவு விருதுகளை பெற அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு "தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி நல்ல தொழில் உறவினை பேணிப் பாதுகாக்கும் வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017-ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. இவ் விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்திலிருந்து (http:/www.labour.tn.gov.in/Labour) ) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது இவ் விண்ணப்பங்களை, அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இவ்விருதுக்கான விண்ணப்பக் கட்டணம் தொழிற் சங்கத்தினருக்கு ரூ.100, வேலையளிப்பவர்களுக்கு ரூ.250 "செயலாளர் / தனித்துணை ஆணையர், தொழில் நல்லுறவு பரிசுக்குழு, தொழிலாளர் ஆணையர் அலுவலகம், சென்னை-6 என்ற பெயருக்கு வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள கணக்குத் தலைப்பின் கீழ் பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளையில் தொகை செலுத்திய அசல் செலுத்துச்சீட்டு (சலான்) வைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) பா.கோட்டீஸ்வரி தெரிவித்துள்ளார்.