நத்தம் மற்றும் செம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வந்தது. நண்பகல் முதல் மாலை வரை அனல் காற்று வீசத் தொடங்கியதால், பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தது. இந்நிலையில், திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்து, மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. இதனிடையே, நத்தம் பகுதியில் இடி மின்னலுடன் 30 நிமிடங்களுக்கு மேலாக பலத்த மழை பெய்தது. அதேபோல் செம்பட்டியிலிருந்து வத்தலகுண்டு வரையிலும் 20 நிமிடங்கள் மழை பெய்தது. இதனால், கடும் வெப்பத்தில் தவித்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.