பணி ஒதுக்கீட்டில் உள்ள முரண்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆசிரியர் தகுதித் தேர்வு பணியை புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆ.லூ.சலேத்ராஜா தெரிவித்துள்ளது:
ஏப்ரல் 29 மற்றும் 30ஆம் தேதி நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முதன்மை கண்காணிப்பாளராக மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும், துறை அலுவலர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளராக முதுகலை ஆசிரியர்களும், கூடுதல் துறை அலுவலர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளராக பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதுகலை ஆசிரியர் பதவிக்கு இணையான பணி நிலையில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், முதுகலை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் மூத்த முதுகலை ஆசிரியர்கள் பணியில் இளையோரான உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரின் கீழ் அறைக் கண்காணிப்பாளராகவும், துறை அலுவலர்களாகவும் செயல்படக் கூடிய சூழல் உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆசிரியர் தகுதித் தேர்வு பணிகளை மாநில அளவில் புறகணிக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.