நிலக்கோட்டையில் மாணவி மீது அமிலம் வீசிய உறவினர் கைது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி மீது அமிலம் வீசியதாக, அவரது சகோதரியின் கணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
நிலக்கோட்டை அடுத்துள்ள கொக்குப்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் சுகந்திரா (17). இவர் நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு மின் தடை ஏற்பட்டதால், அருகில் உள்ள தனது சகோதரி மாலதி வீட்டுக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, சுகந்திராவின் தலையில் மர்ம நபர் அமிலத்தை வீசிவிட்டு தப்பி ஓடி விட்டதாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காயமடைந்த சுகந்திரா நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், அவர் மீது அமிலம் வீசியது, அவரது சகோதரி மாலதியின் கணவர் சு.நடேசன் (28) என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், சுகந்திராவை திருமணம் செய்து கொள்ளும் தனது ஆசை நிறைவேறாததால், அமிலத்தை வீசியதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.