பழனியில் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மீது மர்ம நபர் கல்வீசி தாக்கியதில் அதன் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
பழனி பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று தாதநாயக்கன்பட்டிக்கு புறப்பட்டுச் சென்றது. இப் பேருந்தை ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் ஓட்டினார்.
பேருந்து பழனி சாமி தியேட்டர் அருகே வந்த போது பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த மர்மநபர் திடீரென பெரிய செங்கல்லை எடுத்து பேருந்து மீது வீசினார். இதில் பேருந்தின் முன்புறக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் பயணிகள் சிலர் லேசான காயமடைந்தனர். கல் வீசியவர் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த நகர் போலீஸார் சேதமடைந்த பேருந்தை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.