திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைப் பெறுவோரின் வசதிக்காக 24 மணி நேரமும் கஞ்சி மற்றும் நில வேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பழனி மற்றும் சின்னாளப்பட்டி பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, திண்டுக்கல் மற்றும் பழனி அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக தனி சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையை பொருத்தவரை, கடந்த 2 வாரங்களாக நாளொன்றுக்கு சராசரியாக 65 பேர் வீதம் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்காக இதுவரை 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார் கூறியதாவது: காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள உணவு தயாரிப்பு கூடத்தின் மூலம் 24 மணி நேரமும் கஞ்சி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 24 மணி நேரமும் வெந்நீர் வழங்கப்படுகிறது.
நில வேம்பு குடிநீரை பொருத்தவரை, காலை 8 மணிக்கு வைக்கப்படும் 20 லிட்டர் 1 மணி நேரத்தில் தீர்ந்து விடுகிறது. அதன்பின்னர், 1 மணி நேர இடைவெளியில் 5 லிட்டர் வீதம் 24 மணி நேரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரூ.38 ஆயிரம் செலவில் புதிதாக கொசு வலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் காய்ச்சல் குணமடைந்த நோயாளிகளை, 3 நாள் மருத்துவமனையிலேயே தங்க வைத்து கண்காணித்த பின்னரே அனுப்பப்படுகின்றனர் என்றார்.