பழனியில் ஹார்டுவேர் கடை உரிமையாளர் கழுத்தை நெரித்துக் கொலை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வெள்ளிக்கிழமை ஹார்டுவேர் கடை உரிமையாளர் மர்ம நபர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வெள்ளிக்கிழமை ஹார்டுவேர் கடை உரிமையாளர் மர்ம நபர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
பழனியை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (54). இவரது மனைவி பூங்கொடி (40). இவர்களுக்கு செண்பகநாதன் (24), ஸ்ரீராம் (21) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் செண்பகநாதன் பிலிப்பைன்சில் மருத்துவப்படிப்பு பயின்று வருகிறார். ஸ்ரீராம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். முருகேசன், பழனி- திண்டுக்கல் சாலையில் ஹார்டுவேர் கடை வைத்துள்ளார். இக்கடையை தம்பதிகள் இருவரும் கவனித்து வந்தனர். இவர்கள் பழனி சண்முகபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் வீட்டுக்கு சாப்பிட சென்ற முருகேசன் இரவு நீண்ட நேரமாகியும் கடைக்கு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி பூங்கொடி, தெரிந்த நபரை, தனது வீட்டுக்கு அனுப்பி கணவரை அழைத்து வருமாறு தெரிவித்துள்ளார். அங்கு சென்ற அந்த நபர், வீடு திறந்து கிடப்பதையும், பொருள்கள் சிதறி கிடப்பதையும் பார்த்து, அக்கம்பக்கத்தினரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது படுக்கையறையில் முருகேசன் தேய்ப்பு பெட்டி வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதில், முருகேசன் பல ரூ.லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றை வாங்க பணம் வைத்திருந்ததாகவும், ஏராளமான தங்கக் காசுகள் வைத்திருந்ததாகவும், அவை மாயமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு திண்டுக்கல் எஸ்பி. சக்திவேல், பழனி டிஎஸ்பி. சுந்தர்ராஜ் மற்றும் போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் லிண்டா வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். இக்கொலை குறித்து பழனி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com