பழனிக் கோயில் யானை கஸ்தூரிக்கு சனிக்கிழமை உலக யானைகள் தினத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக கஸ்தூரி யானைக்கு சிறப்பு அலங்காரம் செய்து பெரியநாயகியம்மன் கோயிலில் உள்பிரகாரம் வலம் வர செய்யப்பட்டு முகப்படாம், கொலுசு மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. பின்னர் சாயரட்சை பூஜைகள் முடிந்த பின் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி மண்டபம் முன்பாக கஸ்தூரிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் பூஜைகளை செய்தார். தொடர்ந்து ஆப்பிள், சாத்துக்குடி, தர்பூசணி, வாழைப்பழம், மாதுளை உள்ளிட்ட கனிவகைகளும், கரும்புக் கட்டும் யானைக்கு தரப்பட்டன. நிகழ்ச்சியில் பேஷ்கார் சீனிவாசன், மணியம் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.