ஆசிரியர்களுக்கு 2 ஆவது கட்ட யோகா பயிற்சி
திண்டுக்கல் மற்றும் பழனி கல்வி மாவட்டத்தில் உள்ள 90 ஆசிரியர்களுக்கு 2ஆவது கட்ட யோகா பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்ட அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் சார்பில் ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் அறிவுத் திருக்கோயிலில் வியாழக்கிழமை தொடங்கியது. திண்டுகல் மாவட்டத்தில் 162 அரசு பள்ளிகள் மற்றும் 42 அரசு உதவிப் பெறும் பள்ளிகள் என மொத்தம் 204 பள்ளிகளிலிருந்து, யோகா கற்க விருப்பம் தெரிவித்த 170 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி திண்டுக்கல் மற்றும் பழனி கல்வி மாவட்டங்களுக்கு தலா 85 ஆசிரியர்கள் வீதம் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் மற்றும் பழனியில் உள்ள அறிவுத்திருக்கோயில் வளாகங்களில் முதல்கட்டமாக தலா 40 பேருக்கு கடந்த 10 மற்றும் 11ஆம் தேதிகளில் பயிற்சி வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மீதமுள்ள 90 ஆசிரியர்களுக்கு தலா 45 பேர் வீதம் திண்டுக்கல் மற்றும் பழனி மையங்களில் வியாழக்கிழமை யோகா பயிற்சி வகுப்பு தொடங்கியது. திண்டுக்கல் மையத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியை திண்டுக்கல் மாவட்ட அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் உதவி ஒருங்கிணைப்பாளர் இ.ஜேசுராஜா பயஸ் துவக்கி வைத்துப் பேசினார். இதில் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கே.ராஜா(பழனி), ஆர்.ராஜேந்திரன் (திண்டுக்கல்) ஆகியோர் பங்கேற்றனர்.