பழனி அருகேயுள்ள வரதமாநதி அணையின் உபரி நீரை நல்லதங்காள் ஓடைக்கு திருப்ப விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் மனு அளித்தனர்.
இந்த அணையில் இருந்து மழை காலத்தில் வெளியேறும் உபரி நீர் அமராவதி ஆற்றில் கலந்து கடலில் சேர்கிறது. இந்த உபரி நீரை கால்வாய்கள் மூலம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குள்பட்ட நல்லதங்காள் தடுப்பணைக்கு கொண்டு செல்ல சுமார் 16 கி.மீ தூரத்துக்கு ரூ.26 கோடி செலவில் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு பொதுப்பணித்துறை சார்பில் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தொப்பம்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட பல பகுதிகள் பாசன வசதி பெறும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அணையின் உபரிநீரை நல்லதங்காள் ஓடைக்கு கொண்டு சென்றால் வரதமாநதி பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்றும், குளங்களில் போதிய அளவு தண்ணீர் நிரப்ப இயலாது என்றும் வியாழக்கிழமை ஏராளமான விவசாயிகள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு செயற்பொறியாளர் சுப்பிரமணியத்திடம் இத்திட்டத்தை ஒத்தி வைக்கக் கோரி மனு அளித்தனர்.