குஜிலியம்பாறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு

குஜிலியம்பாறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமானப் பணிகளை தொடக்கி வைக்கச் சென்ற அதிகாரிகளை ஒரு தரப்பினர் முற்றுகையிட்டதால், கட்டுமானப் பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

குஜிலியம்பாறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமானப் பணிகளை தொடக்கி வைக்கச் சென்ற அதிகாரிகளை ஒரு தரப்பினர் முற்றுகையிட்டதால், கட்டுமானப் பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
திண்டுக்கல்  மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியத்திற்குள்பட்ட வடுகம்பாடி ஊராட்சி அலுவலகம் புளியம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்தது. வடுகம்பாடி ஊராட்சியில்,  புளியம்பட்டி, ஒத்தையூர், அரண்மனையூர், எஸ்.களத்தூர் உள்பட 36 குக்கிராமங்கள் உள்ளன.
 இந்நிலையில் புளியம்பட்டியில் செயல்பட்டு வந்த பழமையான ஊராட்சி மன்றக் கட்டடம் சேதமடைந்துள்ளதால், புதியக் கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதனிடையே, புதிய கட்டடத்தை வடுகம்பாடி கிராமத்திலேயே கட்ட வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஏற்கெனவே செயல்பட்டு வந்த புளியம்பட்டி கிராமத்திலேயே மீண்டும் கட்டப்பட வேண்டும் என பெரும்பாலான மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 அதனைத் தொடர்ந்து, புளியம்பட்டியிலே புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளை தொடக்கி வைப்பதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் புதன்கிழமை சென்றனர். ஆனால், அங்கு சென்ற வடுகம்பாடி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 இதனால் அதிருப்தி அடைந்த அதிகாரிகள், கிராம மக்கள் சமாதானமாக பேசி இறுதி முடிவுக்கு வர வேண்டும். அதன்பின்னரே, ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கானப் பணிகள் நடைபெறும் என தெரிவித்துவிட்டு திரும்பிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com