கொடைக்கானலில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளை நகராட்சித் துறை அதிகாரிகள் அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக காற்றுடன் மழை பெய்ததால் செல்லபுரம், லாஸ்காட்சாலை, இருதையபுரம் செல்லும் சாலை, வட்டச்சோலைப் பகுதி, சீனிவாசபுரம், உகார்த்தே நகர் உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சரிந்த மண் சரிவுகளை அகற்றாமல் இருந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக இருந்து வருகிறது. எனவே சாலையில் சரிந்துள்ள மண், கற்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பொக்லைன் இயந்திர வாகனங்கள் மேல்மலைப் பகுதிகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் விழுந்த மரங்களை அகற்றுவதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் நகர்ப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலமாக மண் சரிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.