தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களின் சொத்து விபரங்களை இணையதளத்தில் பதிவிடவும், மேம்படுத்தவும் திருத்தொண்டர்கள் சபை சார்பில் அரசு தலைமைச்செயலருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தமிழக அரசு தலைமைச்செயலருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களின் நிர்வாகத்தில் ஊழல் மற்றும் குற்றங்களை களையவும், தூய நிர்வாகத்தை செயல்படுத்தவும் அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம். அதன்பொருட்டு அறநிலையத்துறை சொத்துக்கள் அனைத்தும் கேட்பு வசூல் பதிவேடுகளில் பராமரித்தல் மட்டுமன்றி அவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். மேலும் சொத்துகளை குத்தகைக்கு, வாடகைக்கு அனுபவிப்பவர்கள் அந்தந்த இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கையொப்பம் மற்றும் பயனாளிகள் புகைப்படத்துடன் இடத்தின் முகப்பில் வைக்க வேண்டும். கோயிலில் பணிபுரிவோர் சொத்து விபரங்கள் இணையத்தில் பதிவேற்றப்படுவதோடு அவ்வப்போது மேம்படுத்தவும் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு அரசுச் செயலர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர் என பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.