பழனி அருகே நெய்க்காரபட்டியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வியாழக்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பழனியை அடுத்த நெய்க்காரபட்டியில் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லாத நிலை நீடித்து வருகிறது. பல வார்டுகளிலும் மோசமான சாலைகளும், சுத்தம் செய்யப்படாத கழிவுநீர் ஓடைகளுமே காணப்படுகின்றன. இப்பேரூராட்சிக்கு உள்பட்ட வேலூரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பேரூராட்சி சார்பில் கழிப்பறை கட்டப்பட்டு இன்னமும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பெண்களும், சிறுவர்களும் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றமும், நோய்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை ஏராளமான ஆண்களும், பெண்களும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மூடிக்கிடக்கும் கழிப்பறையை திறக்கவும், உடனடியாக கழிவுநீர் ஓடைகளை சீரமைக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் இல்லாத நிலையில் பேரூராட்சி அலுவலர்கள், பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.