பிழைப்பதற்கு கற்றுக் கொடுப்பதைவிட, வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கும் கல்வி முறையே தேவைப்படுகிறது என சமூக செயற்பாட்டாளர் ஆளூர் ஷா நவாஸ் பேசினார்.
திண்டுக்கல் இலக்கிய களம் நடத்தும் 6 ஆவது புத்தகத் திருவிழாவின் 8 ஆம் நாள் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற சிந்தனையரங்கம் நிகழ்ச்சிக்கு இலக்கிய களத்தின் பொருளாளர் க.மணிவண்ணன் தலைமை வகித்தார். இதில், என்றென்றும் பெரியார் என்ற தலைப்பில் ஆளூர் ஷா நவாஸ் பேசியதாவது:
விஞ்ஞானம், பொறியியல், அறவியல் ஆகிய துறைகளில் ஏற்பட்டு வரும் நவீன வளர்ச்சிக்கு ஏற்பவும், ஈடுகொடுக்க கூடிய வகையிலும் தமிழ் மொழியை உயர்த்த வேண்டும் என விரும்பியவர் பெரியார். பழமை வாதம் மற்றும் மூட நம்பிக்கையின் கூடாரமாக தமிழ் மொழி சுருங்கிவிடக் கூடாது என்பதற்காக முற்பட்டார். தனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், நம்பிக்கை உடையவர்களின் உரிமைக்காக போராடியவர். இந்து சமுதாயத்தை மட்டுமே எதிர்த்தவர், தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி என்றெல்லாம் பெரியாரை சித்தரிக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களின் மேன்மைக்காக இரட்டை வாக்குரிமையை வலியுறுத்தி குரல் எழுப்பிய ஒரே நபராகவும் விளங்கியவர் பெரியார்.
மொழி, இன, மத சிறுபான்மை மக்கள் இன்றைக்கு தமிழ் மண்ணில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு சூழலை உறுதிப்படுத்திய பெருமை பெரியாருக்கு மட்டுமே உள்ளது. பெரியாரை முழுமையாக தெரிந்து கொள்ளாமலே, அவர் மீதான விமர்சனங்கள் இன்று வரை தொடர்கின்றன.
புத்தக் திருவிழாக்களில் ஆர்வத்தோடு வாங்கப்படும் புத்தகங்கள், வாசிக்கப்படுவதில்லை. அதனால் தான், இந்த சமூகத்தின் வரலாறு முழுமையாக நமக்கு தெரிவதில்லை. பிழைக்க கற்றுக் கொடுக்கும் தற்போதைய கல்வி முறைக்கு மாற்றாக, வாழக் கற்றுக் கொடுக்கும் கல்வியே இன்றைய தேவையாக உள்ளது என்றார் அவர்.