வத்தலகுண்டு அருகே விருவீடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மஞ்சுளா(32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு, கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி பகுதியில் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா (32) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந் நிலையில், மணிகண்டனுக்கும், சித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாம். இதனால், தனது கணவரை மஞ்சுளா கண்டித்துள்ளார். மேலும், சித்ராவை வேலைக்கு வரவேண்டாம் என மஞ்சுளா கூறிவிட்டாராம். இதனால், கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி மஞ்சுளா வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை மஞ்சுளா உயிரிழந்தார். கொடைக்கானல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.