ஒட்டன்சத்திரம் சின்னக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குச் சொந்தமான தாராபுரம் சாலை அருகே சுமார் 27 ஏக்கரில் சின்னக்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. சமீபத்தில், இந்த குளத்தை சுற்றிலும் ஏராளமான கட்டடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்களும், சின்னக்குள பாசன விவசாயிகளும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், சனிக்கிழமை வருவாய்த் துறையினர் சின்னக்குளத்தை அளவிடும் பணியை தொடங்கினர். இதில், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் பொ. மாரிமுத்து, ஆணையர் ம. இளவரசன், துணை வட்டாட்சியர் எம். முத்துச்சாமி, நில அளவையர்அருண்பாண்டியன் ஆகியோர் ஈடுப்பட்டு வருகின்றனர்.