திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.5.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வனத் துறை அமைச்சர் சி. சீனிவாசன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
சின்னாளப்பட்டியில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் சி. சீனிவாசன், 481 பயனாளிகளுக்கு ரூ.5.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை அரசின் நலத்திட்ட உதவிகள்,மாவட்டத்தின் கடைக் கோடி பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் பகுதியில் தோல் கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்கும் வகையில் ரூ. 3கோடி செலவில் சுத்திகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குடிநீர் பிரச்னைக்கு தாற்காலிகத் தீர்வு காணும் வகையில், லாரிகள் மூலம் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தேவைக்கேற்ப புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.