நிலக்கோட்டை ஒன்றிய விவசாயிகள் மாநாடு சிறுநாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதற்கு, விவசாயிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலர் எஸ்.ஆர். செளந்தர்ராஜன் வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயலர் ஆர்.சச்சிதானந்தம் சிறப்புரையாற்றினார். இதில், நிலக்கோட்டை பகுதியில் மண்அள்ளுபவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டிபட்டி, மிளகாய்பட்டி விவசாயிகளின் கோரிக்கையான கரடு அடிவாரத்தில் கண்மாய் அமைத்து தர வேண்டும். மஞ்சளாறு ஆலங்குளம் கண்மாயை சீரமைத்து தர வேண்டும்.
எஸ்.மேட்டுபட்டி மற்றும் முசுவனூத்து மலைப்பகுதியில் இருந்து வரும் வன விலங்குகளால் விவசாயம் அழியப்படுகிறது. இதை தடுக்க மின்வேலி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்கத்தின் புதிய தலைவராக ஏ.பாலசுப்பிரமணியமும், செயலராக செளந்தர்ராஜனும், பொருளாளராக வேலமுருகன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.