கொடைக்கானல் சந்தையில் இருந்து கால்நடை வதைக் கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற பரிசீலனை நடக்கிறது.
கொடைக்கானலில் ஆடு, மாடுகள் வதைக் கூடம் நகராட்சி சார்பில் பல ஆண்டுகளுக்கு முன் அண்ணாநகர்ப் பகுதியில் செயல்பட்டது. அப்பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்ததால் அந்த வதைக் கூடம் கொடைக்கானல் அண்ணாசாலைப் பகுதிக்கு தாற்காலிகமாக மாற்றப்பட்டது. ஆனால் இங்கு சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், எனவே அந்த வதைக் கூடத்தை கொடைக்கானல் பி.டி.சாலையிலுள்ள வாரச் சந்தைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கூறி மதுரையைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் வாரச்சந்தைப் பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு கால்நடை வதைக் கூடம் கட்டும்பணி நடைபெற்றது. ஆனால் அங்கு வதைக் கூடம் கட்டக் கூடாது என்றும், கட்டினால் அருகிலுள்ள அரசு மருத்துவமனை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறி, அதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாதியிலேயே கால்நடை வதைக்கூடம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது.
தற்போது அங்கு முள்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இவற்றை சுத்தம் செய்வதற்கு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்தைப் பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கொடைக்கானல் நகர்நல அலுவலர் ராம்குமார் கூறியதாவது: கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் உள்ள கால்நடை வதைக் கூடத்திற்கு பல்வேறு பிரச்னைகள் இருந்து வருவதால், அதை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் அருகே பிரகாசபுரம் பகுதியில் கால்நடை வதைக் கூடம் அமைப்பதற்கும், வாரச்சந்தைப் பகுதியில் கட்டப்படும் கால்நடை வதைக் கூடத்தில் நிறைந்துள்ள முள்புதர்களை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.