பழனியருகே கலிக்கநாயக்கன்பட்டியில் நள்ளிரவில் தோட்டத்து வீட்டில் திருட வந்த நபரை பொதுமக்கள் பிடித்து தென்னை மரத்தில் கட்டி வைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கலிக்கநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த பல நாள்களாக வீடுகளில் இருந்த பொருள்கள், இருசக்கர வாகனம் மற்றும் தோட்டங்களில் மோட்டார், ஆழ்குழாய் மோட்டாரின் வயர்கள் திருடு போயின. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ராமசாமி என்பவர் தோட்டத்தில் இருவர் நுழைந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அங்கிருந்த பொருள்களை திருட முயன்ற போது பொதுமக்கள் அவர்களைப் பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் தப்பி ஓடினார். மற்றொருவர் பிடிபட்டார். அவரை அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டி வைத்தனர். பிடிபட்டவர் அதே ஊரை சேர்ந்த முருகசாமி என்பவராவார். இவர் மீது ஏற்கெனவே பல திருட்டு வழக்குகள் உள்ளதாம். தகவலறிந்து அங்கு பழனி டவுன் போலீஸார் வந்து அந்த நபரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.