பழனியில் திங்கள்கிழமை பலத்த காற்று வீசியதால் மலைக்கோயில் ரோப்கார் இயக்குவதில் இடையூறு ஏற்பட்டது.
பழனியில் கடந்த சில நாள்களாக காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. பழனியை அடுத்த உடுமலை, தாராபுரம் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர் புழுதிக் காற்றினால் வாகனத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட்டனர். இலகுவான கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை காற்று அதன் திசைக்கு தள்ளி சென்றது. பழனி சுற்றுவட்டார கிராமங்களிலும் காற்றின் வேகத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் கூரைகள் பறந்தன. பல இடங்களிலும் மழை இல்லாமல் காயந்து இருந்த மரங்கள் சாய்ந்தன. சண்முகநதி, காவலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரங்கள் மற்றும் பல்வேறு மரங்களின் கிளைகள் சுழன்று வீசிய காற்று காரணமாக முறிந்து விழுந்தன.
சுமார் 50 கி.மீ வேகத்திற்கு மேல் வீசிய பலத்த காற்றின் காரணமாக மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப்கார் இடைஇடையே நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டது. பலத்த மழையின்போது கூட இயக்கப்படும் ரோப்கார் காற்றின் போது பாதுகாப்பு காரணமாக இயக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.