குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி, திண்டுக்கல், ராகலாபுரம் மற்றும் பெருமாள்கோவில்பட்டி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை அடுத்துள்ள பொருள்மாள்கோயில்பட்டி கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள 5 ஆழ்துளை கிணறுகளில் 4இல் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. ஒரு ஆழ்துளை கிணறு மூலம் 1 மணி நேரம் மட்டும் கிடைக்கும் தண்ணீர் அங்கு வசிக்கும் 1000 குடும்பத்தினருக்கு போத வில்லை. இதனால், கடந்த 5 ஆண்டுகளாக குடிநீர் மட்டுமின்றி, பிற தேவைகளுக்கான தண்ணீரையும் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதற்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதே போல் ராகலாபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். மாதிரி ஊராட்சியாக மக்களவை உறுப்பினர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கிராமத்தில், அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்பட வில்லை. அதிலும் குறிப்பாக குடிநீருக்காக அருகில் உள்ள தோட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, முதற்கட்டமாக குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குள்பட்ட பாப்புலர் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தனியார் தண்ணீர் விற்பனை செய்வதை தடுக்கக் கோரி மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தனியார் ஒருவர் அப்பகுதியில், ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் விற்பனை செய்து வருகிறார். இதனால், எங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, அவர் தண்ணீர் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றனர்.