கன்னிவாடி அருகே சொத்துத் தகராறில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னிவாடி அடுத்துள்ள வீரப்புடையான்பட்டியைச் சேர்ந்த கலியபெருமாள் மற்றும் கார்த்திகைவேல் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து கன்னிவாடி காவல் நிலையத்தில் கலியபெருமாள் அளித்த புகாரின் பேரில் கார்த்திகைவேல் (35), மணிவேல் (17), அம்முனி அம்மாள் (70), ராசாத்தி (30) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் கார்த்திகைவேல், அம்முனி அம்மாள், ராசாத்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதே போல கார்த்திகைவேல் மனைவி ராசாத்தி அளித்த புகாரின் பேரில் கலியபெருமாளின் மகன்கள் கருப்பையா என்ற சுரேஷ்குமார் (42), ராமசாமி (40), முத்தையா (39) மற்றும் உறவினர் சந்திரசேகர் (35) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் சந்திரசேகர், கருப்பையா என்ற சுரேஷ்குமார், முத்தையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் திண்டுக்கல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.