செம்பட்டி அருகே அரசுப் பள்ளி வகுப்பறை கட்டுமானப் பணிகள் மந்தமாக நடைபெறுவதால், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்துள்ள சீவல்சரகு ஊராட்சிக்கு உள்பட்ட ஜெ.புதுக்கோட்டை கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். கட்டட வசதி குறைவாக உள்ள இந்த பள்ளியின் தேவைக்காக, ரூ.12 லட்சம் செலவில் 2 வகுப்பறைகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், கட்டுமானப் பணிகள் தொடங்கின. தரைமட்டம் அளவிலான கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து முடிந்த நிலையில், அதன் பின்னர் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை.
இதனிடையே கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டட வசதியில்லாமல் மாணவர்கள், மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது.
வகுப்பறை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.
கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.