கன்னிவாடி அருகே கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட லாரி உரிமையாளரை அரிவாளால் வெட்டிய லாரி ஒட்டுநர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னிவாடி அடுத்துள்ள தருமத்துப்பட்டி போடம்பட்டியைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (48). இவருக்குச் சொந்தமான லாரியில் அழுகுமடையைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் சோமசுந்தரம் (45) என்பவர் ஒட்டுனராக வேலை செய்து வந்தார்.
முன்னதாக, மகுடீஸ்வரனிடமிருந்து கடனாக சோமசுந்தரம் ரூ. 50 ஆயிரம் பெற்றிருந்தாராம். போதிய வருமானம் இல்லாததால், லாரியை மகுடீஸ்வரன் விற்று விட்டாராம். இந்த நிலையில், சனிக்கிழமை மகுடீஸ்வரன் தான் கொடுத்த பணத்தைக் கேட்க சோமசுந்தரம் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், சோமசுந்தரம் தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மகுடீஸ்வரனை வெட்டியுள்ளார். சோமசுந்தரத்தின் உறவினர் பாலன் மகன் பாபு (27) என்பவரும் சேர்ந்து மகுடீஸ்வரனை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மகுடீஸ்வரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, மதுரையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கன்னிவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சோமசுந்தரம் மற்றும் பாபு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.