மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக சார்-ஆட்சியருக்கு புகார் செய்யப்பட்டது. இதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன் வியாழக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சார்-ஆட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், சங்கத்தின் மாவட்டச் செயலர் பகத்சிங் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் படும் அவதி குறித்து விளக்கப்பட்டது. அப்போது பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் தெரிவித்ததாவது: உதவித் தொகை வழங்குவது தொடர்பாக கூடுதலாக 5 வங்கித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கைரேகை பதிவுக்கு நவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய இயந்திரங்கள் வாங்கப்படும் என்றார்.
மேலும், வருவாய்த்துறை சார்பில் வங்கித் தொடர்பாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைக்கு சென்று வழங்க வேண்டும். பயனாளிகளிடம் கனிவாக நடந்து கொள்வதோடு தினமும் பணப் பட்டுவாடா செய்த விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து வங்கி அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று பணத்தை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.