பழனியை அடுத்த நெய்க்காரபட்டியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் உணவு தரமின்றி இருப்பதாக, மாணவர்கள் சார்-ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை புகார் செய்தனர்.
நெய்க்காரபட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, நிரந்தரமான காப்பாளர் இல்லாத நிலையில், கடந்த சில நாள்களாக மாணவர்களுக்கு தரமில்லாத உணவு வழங்கப்பட்டு வந்துள்ளது. எனவே, செவ்வாய்க்கிழமை 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பழனி சார்-ஆட்சியர் வினீத்தை நேரில் சந்தித்து புகார் மனு வழங்கினர். அதில், விடுதியில் காலையில் சமைத்த உணவையே 3 நேரமும் சாப்பிட வேண்டி உள்ளதாகவும், கழிவறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, சார்-ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களுக்கு உறுதியளித்தார்.