உலக வன தினத்தை முன்னிட்டு, கொடைக்கானல் வனத் துறையின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வன விலங்குகளை பாதுகாப்பது குறித்து நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, மாவட்ட வன அலுவலர் முருகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். ஊர்வலமானது, கே.ஆர்.ஆர். கலையரங்கத்தில் தொடங்கி ஏரிச்சாலை, செவன் ரோடு, அண்ணா சாலை, கே.சி.எஸ். திடல் வழியாக வன அலுவலகத்தை அடைந்தது. இதில், உதவி வனப் பாதுகாவலர் பாலகிருஷ்ணன், ரேஞ்சர்கள் ரவி, ஆனந்த் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வர் சந்திரமணி மற்றும் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, வனம், விலங்குகள், மரங்களையும் பாதுகாப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டுச் சென்றனர்.
கருத்தரங்கு: அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற வனப் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி குறித்த கருத்தரங்குக்கு, கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமை வகித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் கொடைக்கானல் மலையின் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது அப்போது, தீயைக் கட்டுப்படுத்த சிறப்பான முறையில் பணியாற்றிய 4 சுழல் காவலர்களுக்கு ரொக்கப் பரிசுகளையும், வனத் துறை சார்பில் நடைபெற்ற பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்களையும், மாவட்ட வன அலுவலர் வழங்கினார். தொடர்ந்து, வனப் பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் சந்திரமணி, கொடைக்கானல் ரேஞ்சர்கள் ஆனந்த், ரவி, படகு குழாம் நிர்வாகி ராமச்சந்திர துரைராஜா மற்றும் பல்கலைக்கழக பேராசிரியைகள், மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை விமலா நன்றி கூறினார்.