ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பேருந்துக்கு காத்திருந்த பயணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 4 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பெரியூரை அடுத்துள்ள பள்ளத்துக் கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (43). இவர் செவ்வாய்கிழமை இரவு வேலை முடித்து விட்டு ஊருக்குச் செல்ல ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தராம். அப்போது அங்கு வந்த குத்திலுப்பையைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் பாண்டியராஜ் (19), ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சேர்ந்த விமல்குமார் மகன் சபரீஸ்வரன் (17), வ.உ.சி. நகரைச் சேர்ந்த குப்புச்சாமி மகன் அர்ஜூன் (17), திடீர் நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் கணேசமூர்த்தி (16) ஆகியோர் காளிமுத்துவைக் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனராம். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 4 பேரையும் பிடித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் 4 பேரையும் கைது செய்தனர்.