சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி கொடைக்கானல் அருகே பெருமாள்மலை பழனி பிரிவு பகுதியில் புதன்கிழமை பெண்கள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோடை குறிஞ்சி பெண்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மகேஸ்வரி தலைமை வகித்துப் பேசினார். முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஷீலா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளிப் பாட புத்தகங்களில் பாடமாக கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ராஜலட்சுமி நன்றி கூறினார். கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.