நிலக்கோட்டை அருகே புதன்கிழமை நூத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குடிநீர் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நூத்துலாபுரம் கிராம பகுதிகளில் முறையாக குடிநீர் விநியாகிக்கக் கோரி கடந்த 2 மாதங்களுக்கு முன் சாலை மறியல் நடைபெற்றது. அப்போது, புதிதாக ஆழ்துளைகிணறு அமைத்து குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதே போல் ஆழ்துளைகிணறு அமைக்கப்பட்டது.
ஆனால் அங்கிருந்து இதுவரை, மின்மோட்டார் மற்றும் குழாய் அமைத்து குடிநீர் விநியோகிக்கப்பட வில்லை. இதுகுறித்து 4 நாள்களுக்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக்கூறி மதுரை- வத்தலகுண்டு சாலையில் காலிக்குடங்களுடன் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவர்களிடம், வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் அமைத்து தர ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.