வத்தலகுண்டு அருகே செவ்வாய்க்கிழமை போர்வெல் லாரி தீப்பிடித்து எரிந்ததில் கிளீனர் காயமடைந்தார்.
வத்தலகுண்டு அருகே எழுவனம்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சூரிய சக்தி மின்விளக்கு தயாரிக்கும் நிறுவனத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, இப்பணியில் ஈடுபட்ட போர்வெல் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கு வந்த வத்தலகுண்டு தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதில் காயமடைந்த அந்த லாரியின் கிளீனர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சத்தியம் (19) என்பவர் சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.