கொடைரோடு அருகே நான்கு வழிச்சாலையில் வியாழக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் சென்றவர் தவறி கீழே விழுந்ததில் அவ்வழியாக சென்ற வாகனம் மோதி உயிரிழந்தார்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஜய்சிங் மகன் ரித்து (23), அதே பகுதியை சேர்ந்த ஹரிதாஷன் மகன் அபிஷேக் (24). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டு இருந்தனர்.
அவர்கள், கொடைரோடு அன்னசமுத்திரம் கண்மாய் அருகே வந்தபோது, நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ரித்து உயிரிழந்தார். இதில் பலத்த காயமடைந்த அபிஷேக் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.