பழனி அருகே சொத்து தகராறு: தாய், மகள் வெட்டிக் கொலை

பழனி  அருகே ஞாயிற்றுக்கிழமை சொத்து தகராறில் அண்ணனின் மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு தப்பியோடிய தம்பியை, போலீஸார் கைது செய்தனர்.

பழனி  அருகே ஞாயிற்றுக்கிழமை சொத்து தகராறில் அண்ணனின் மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு தப்பியோடிய தம்பியை, போலீஸார் கைது செய்தனர்.
 திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வி.கே.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (60). இவரது மனைவி தனலட்சுமி (52) மற்றும் மகள் தமிழ்செல்வி (23).    கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனலட்சுமியும், மாரிமுத்துவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மாரிமுத்து தனது தம்பி தண்டபாணி (55) என்பவருடன் வசித்து வருகிறார். தண்டபாணி வீடும், தனலட்சுமி இருந்த வீடும் அருகருகே உள்ளன.
தண்டபாணி, மாரிமுத்து சகோதரர்கள் இருவருக்கும் பிரதானப் பகுதியில் சுமார் 7 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இந்நிலையில், மாரிமுத்துக்குரிய நிலங்களை அவரது தம்பி தண்டபாணி தனது பெயருக்குப் பதிவு செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனலட்சுமியும், தமிழ்செல்வியும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், நிலங்களில் ஒரு பகுதியை தனலட்சுமி தரப்புக்கு வழங்க தீர்ப்பாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தண்டபாணி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பால் வாங்க வெளியே வந்த தனலட்சுமியையும், வீட்டில் இருந்த அவரது மகள் தமிழ்செல்வியையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.  பட்டப்படிப்பு முடித்திருந்த தமிழ்செல்விக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொலை நடந்த நேரத்தில் மாரிமுத்து இருந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பழனி டி.எஸ்.பி. வெங்கட்ராமன் மற்றும் போலீஸார், மாரிமுத்துவை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய தண்டபாணியை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com