வத்தலகுண்டு அருகே ஓடும் ஆட்டோவில் இருந்து விழுந்தவர் மூளைச் சாவு அடைந்ததால், அவருடைய உடல் உறுப்புக்களைத் தானம் செய்வதாக குடும்பத்தினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
வத்தலகுண்டு அருகேயுள்ள பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ்(50). விவசாயத் தொழில் செய்து வந்தார். இவர், கடந்த சனிக்கிழமை ஷேர் ஆட்டோவில் வத்தலகுண்டுக்கு வந்து கொண்டு இருந்தார். மீனாட்சிபுரம் பிரிவு அருகே ஆட்டோவில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.
அவர், சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மூளை சாவு அடைந்தார்.
இதையடுத்து, மேல் சிக்கிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமைனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், நாகராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக இவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக விருவீடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.