திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் தியாகி சுப்பிரமணிய சிவா பேரூராட்சி பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து, சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, மதுரை, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கொடைக்கானல், தேனி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு 24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 700 பேருந்துகள் இங்கு வந்து செல்கின்றன. மேலும், சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்குச் செல்வதற்கு நகரப் பேருந்து வசதியும் உள்ளது. எனவே, 24 மணி நேரமும் பேருந்து நிலையம் செயல்படுகிறது. வத்தலகுண்டில் காய்கறி, வாழைச் சந்தைகள் செயல்படுவதால், ஏராளமான விவசாயிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இப்பேருந்து நிலையத்தின் உள்புறம் பயணிகள் அமரும் இருக்கை சில மாதங்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டன. ஆனால், இது போதுமானதாக இல்லை. மேலும், குடிநீர், சிறுநீர் கழிப்பிட வசதிகளும் இல்லை. பேருந்து நிலையக் கடைகளின் உரிமையாளர்கள், நடைமேடையில் ஏராளமான இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பயணிகள் நடந்து செல்ல வசதியில்லை.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் பேருந்து நிலைய கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணிகளுக்கு வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் என, பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.