உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பழனி சார்- ஆட்சியர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
பழனி சார்- ஆட்சியர் வினீத், கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பழனி சார்- ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சார்- ஆட்சியர் முகாமில் வசித்து வருகிறார். கொடைக்கானலில் கோட்டாட்சியர் இல்லாததால், கடந்த சில வாரங்களாக அங்கு கோடை விழா ஏற்பாடுகளை, அவர் சேர்த்து கவனித்து வந்தார். இந்நிலையில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை கொடைக்கானலில் இருந்து பழனி வந்த அவர், பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.