கொடைக்கானலில் ஆதிவாசி கிராம மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானலிருந்து 25-கி.மீ தூரம் உள்ளது தாமரைக்குளம். இந்தப் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு இல்லாத கிராமப் பகுதியாகும். இங்கு மலைவாழ் மக்கள் மற்றும் ஆதிவாசி மக்கள் சுமார் 45 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த வாரம் கொடைக்கானல் காவல் துறை கண்காணிப்பாளரிடம் பல்வேறு வசதிகள் கேட்டு கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு கொடைக்கானல் குறிஞ்சி அரிமா சங்கம், ரோட்டரி கிளப் சார்பில் மன்னவனூர் மருத்துவக் குழுவினர் சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஸ்வெட்டர், கம்பளி, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைத்து குழாய் மூலம் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் டி.எஸ்.பி.செல்வம் தலைமை வகித்தார். தாண்டிக்குடி இன்ஸ்பெக்டர் சுபக்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் முருகன் ஆதிவாசி மற்றும் மலைவாழ் மக்களுக்கு சங்கங்கள் சார்பில் வழங்கப்பட்ட சுமார் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர், ரோட்டரி சங்கத் தலைவர் ரோகன் சாம்பாபு, முன்னாள் தலைவர் சதீஷ்,குறிஞ்சி அரிமா சங்க பட்டயத் தலைவர் ராஜேஸ் கண்ணா, தலைவர் சாரதி,பொருளாளர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.